PSLV C-55: டெலியோஸ்-2..பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..என்ன சிறப்பம்சம்

ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.

அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், டெலியோஸ்-2 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 22 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

டெலியோஸ்-2 செயற்கைக்கோளானது பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும். முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இதில் இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்படும் வணிகப் பணியில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட ‘டெலியோஸ்-2’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள், இதனுடன் 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற 2 செயற்கைகோள்களை கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் ஏவப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் பி.எஸ்.எல்.வி. புதிய ஒருங்கிணைப்பு வசதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ ஒரு புதிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. புதிய அணுகுமுறையானது, விண்வெளி நிறுவனம் குறைந்த நேரத்தில் அதிக பயணங்களை தொடங்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.