
‛அயலான்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் ‛அயலான்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம், வேற்றுகிரகவாசிகள் பற்றிய கதையாக உருவாகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுட்டிருக்கும் நேரத்தில், படத்தின் தயாரிப்பாளரான கேஜேஆர் ராஜேஷ், ‛அயலான்' படம் குறித்த முக்கிய அறிவிப்பை நாளை (ஏப்.,24) வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நாளை காலை 11:04 மணிக்கு அயலான் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். “அயலான்” திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். பான்-இந்தியா படமாக உருவாகியுள்ளது.
திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. மேலும், 4500க்கும் மேற்பட்ட வி.எப்.எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக 'அயலான்' இருக்கும். உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாளைய அயலான் அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். 'அயலான்' மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.