பாட்னா எதிர்க்கட்சி தலைவர்கள் மீட்டிங்கிற்கு பிறகு பிரஸ்மீட்! வேறுபாடுகள் இருப்பது உண்மைதான்: கார்கே

பாட்னா: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ஜூலை இரண்டாவது வாரத்தில் ஷிம்லாவில் எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என வியூகம் வகுத்து வருகிறது. தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்கி முழு வீச்சில் அக்கட்சி செயல்பட தொடங்கியுள்ளது. பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டியுள்ள எதிர்க்கட்சிகள், ஓரணியில் திரண்டால் இது சாத்தியபப்டும் என பேசி வருகின்றன.

இதற்கான முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக நிதிஷ்குமார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், லோக்சபா தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தன. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “நாட்டின் கட்டமைப்பை பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் சிதைக்கிறது. வேறுபாடுகள் இருந்தாலும் கருத்தியலுக்காக ஒன்றாக இணைந்துள்ளோம்” என்றார்.

அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், வரும் ஜூலை 12 ஆம் தேதி சந்திக்க இருக்கிறோம். தேர்தலில் செயல்திட்டம் எப்படி வகுப்பது, பாஜகவிற்கு அவரவர் மாநிலங்களில் எப்படி ஒருங்கிணைந்து போட்டியிடுவது என்பது குறித்த திட்டம் வகுக்கப்படும். பாஜகவை தூக்கி எறிய நாங்கள் முடிவு செய்துள்ளோம். வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.