உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடக்கை பேட்ஸ்மேன்கள் இருவர் இடம் பெற வேண்டும் – ரவிசாஸ்திரி

மும்பை,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அதிகாரபூர்வ அட்டவணை மும்பையில் நாளை நடக்கும் ஐ.சி.சி. நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.

உலகக் கோப்பை போட்டியில் எந்த மாதிரியான இந்திய அணி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகுடம் சூடுவதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் சரியான கலவையில் அனுபவமும், இளமையும் கொண்ட ஒரு அணியை உருவாக்க வேண்டும். விரும்பிய வீரர்களை எடுப்பதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. முழுமையான, வலுமிக்க அணியாக களம் இறக்கும் போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் இந்தியாவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும்.

இந்திய அணியின் டாப்-6 வரிசை பேட்ஸ்மேன்களில் குறைந்தது இருவர் இடக்கை ஆட்டக்காரராக இருக்க வேண்டும். அப்போது தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அணியின் கலவையும் கச்சிதமாக அமையும். கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் இளம் இடக்கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாட முடியாத சூழலில் இருக்கிறார். ஆனாலும் இந்தியாவில் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்களால் எந்த சீனியர் வீரரின் இடத்தையும் நிரப்ப முடியும். இன்னும் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கலக்கிய சாய் சுதர்சன், நேஹல் வதோரா ஆகியோரையும் சொல்லலாம்.

இப்போது முன்னணி வீரர்கள் சிலர் காயத்தில் உள்ளனர். அதனால் உலகக் கோப்பை போட்டிக்கான பட்டியலில் 15-20 வீரர்களை நாம் வைத்திருக்க வேண்டும். காயத்தில் சிக்கிய வீரர்கள் திரும்ப முடியாமல் போனால் மாற்று வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்.

சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னர். உண்மையிலேயே தன்னுடைய முழு திறமையையும் அவர் இன்னும் உணரவில்லை. சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் போது ரன்வேட்டையில் எந்த சாதனையும் முறியடிக்காமல் முடித்தால் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன். நான் பயிற்சியாளராக இருந்தபோது ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இடம் பெறமாட்டார். அது எனக்கு வேதனையாக இருக்கும். அதன் பிறகு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இப்போது தொடர்ந்து டெஸ்டிலும் விளையாடுகிறார். அந்த சமயத்தில் ரோகித் சர்மாவை எப்படி தவற விட்டதாக உணர்ந்தேனோ அதே போல் சஞ்சு சாம்சனையும் நினைக்கிறேன்.

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதியை வைத்து பார்த்தால் அவரால் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்பது தெளிவாகிறது. ஆனால் வெள்ளைநிறப்பந்துகளில் விளையாடப்படும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பு, உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் வசம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், தற்போதைய உலகக் கோப்பை போட்டியில், அணியை ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும். அதில் எந்த கேள்வியும் இல்லை.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.