நாமக்கல்: 1,800 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு; காவலர்கள் இருந்தும் ஓயாத பிரச்னை – தீர்வு எப்போது?

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வடகரையாத்தூர் ஊராட்சி கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஆடு மேய்க்க சென்ற திருமணம் ஆன இளம்பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அருகில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த பெண்ணின் உறவினர்கள், “இந்த கொலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு தொடர்புள்ளது. அவர்களையும் கைது செய்ய வேண்டும்” என்று காவல்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், குளத்தில் விஷம் கலந்தது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் இரு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த மே மாதம் 13-ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தீவைத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதில், 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில், ராஜேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைதந்த நூற்றுக்கணக்கான போலீஸார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், அதையும் மீறி மீண்டும் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600 – க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

இதுபோல் தற்போதும் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (60). இவரின் விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் செல்லும் வழியில் உள்ளது. அங்கே உள்ள அவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,000 பாக்கு மரம் நடவு செய்துள்ளார். இந்நிலையில், அவரின் பக்கத்து தோட்டத்துக்காரர் தங்கமுத்து என்பவர் நேற்று அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது, சௌந்தர்ராஜன் தோட்டத்தில் இருந்த சுமார் 1,800க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, அந்த தகவலை நிலத்தின் உரிமையாளர் சௌந்தர்ராஜனுக்கும், ஜேடர்பாளையம் காவல் நிலையத்துக்கும் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸ் டி.எஸ்.பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜேடர்பாளையம்

மேலும், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள், பாக்கு மரம் மற்றும் அந்த பகுதியில் உள்ள மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஊர் முழுவதும் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த நிலையில், எப்படியோ மர்ம நபர்கள் தைரியமாக இதுபோல் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருவதால், அடுத்து எந்தெந்த பகுதிகளில் என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிக்கு காவல்துறை, வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர்,

“இந்த தொடர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?. ஒவ்வொரு நாளும், இன்னைக்கு யார் வீட்டு தோட்டத்தை அழிக்கப்போகிறார்கள், யார் வீட்டில் தீவைக்கப்போகிறார்கள் என்ற பயத்திலேயே மக்கள் வாழ வேண்டியுள்ளது. அந்த இளம்பெண்ணின் கொலைக்கு பிறகு, இது சமூக பிரச்னையாக உருவெடுத்ததோடு, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் மாறியிருக்கிறது. அதில், ஒரு வடமாநில இளைஞரின் உயிரும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு நாமக்கல் மாவட்ட எஸ்.பியாக இருந்தவரும், ஆட்சியரும் இரண்டு தரப்பு மக்களையும் அழைத்து பேசிப்பார்த்தார். ஆனால், அதன்பிறகும் பிரச்னை ஓயவில்லை. அதனால், ஆட்சியர், மாவட்ட எஸ்.பி, மூன்று டி.எஸ்.பிகள் என்று பலரையும் பணிமாறுதல் செய்தார்கள். ஆனால், புதிதாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி வந்தபிறகு, இவ்வளவு போலீஸார் பாதுகாப்பு பணியில் இருக்க்கும்போதுமே, தொடர்ந்து இதுபோல் பிரச்னைகள் நடப்பது கொடுமை. போலீஸார் மெத்தனமாக செயல்படுவதையே இது காட்டுகிறது. தினம் தினம் அச்சத்துடனேயே வாழும் மக்களை, அரசின் இரும்புகரம் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கைதான் காக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

தீ வைப்பு சம்பவம்

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தால், “நாங்கள் மெத்தனமெல்லாம் காட்டவில்லை. எல்லாவகையிலும் ஊர் முழுக்க போலீஸ் ஃபோர்ஸை இறக்கி, 24 மணிநேரமும் பாதுகாப்பு கொடுத்து வருகிறோம். ஆனால், அதையும் மீறி மர்மநபர்கள் இப்படி செய்துவிடுகிறார்கள். இருந்தாலும், இதுபோன்று ஏற்படுத்தப்படும் பிரச்னைகள் தடுக்க, இன்னும் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம். இனிமேல் ஒரு சம்பவம்கூட இதுபோல் நடக்காது” என்றார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.