சென்னை: மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் ஃபஹத் பாசில்.
அவரது நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஃபஹத் பாசில், அவரது மனைவி நஸ்ரியா ஆகியோருடன் ஏஆர் ரஹ்மான் எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.
ஃபஹத் பாசிலுடன் ஏஆர் ரஹ்மான்:மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் ஃபஹத் பாசில். முன்னதாக விக்ரம், வேலைக்காரன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அதேபோல், தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் டோலிவுட் ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளார். கடந்த வாரம் அவர் ஹீரோவாக நடித்துள்ள தூமம் திரைப்படமும் வெளியானது.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லரில் ஃபஹத் பாசிலின் கேரக்டர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமான வில்லன் கேரக்டரில் தனக்கே உரிய பாணியில் மிரட்டியுள்ளார் ஃபஹத். இதனால் மாமன்னன் திரைப்படம் தரமான விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகளில் ஃபஹத் பாசில் நடிப்பைப் பார்த்து ஏஆர் ரஹ்மான் மிரண்டு விட்டாராம்.
மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜிடம் இதுகுறித்து பேசிய ஏஆர் ரஹ்மான், “ஃபஹத் பாசிலின் நடிப்பை பார்த்து எனக்கு பயம் வந்துவிட்டது. தயவுசெய்து அவரை சில ரொமன்ஸ் பின்னணிக் கொண்ட படங்களில் நடிக்க சொல்லுங்க. இப்படியெல்லாம் நடித்தால் அவரை நேரில் பார்க்கவே பயமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். இதனை மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ, வில்லன், காமெடி என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் வெரைட்டி காட்டி வருகிறார் ஃபஹத் பாசில். கடந்தாண்டு கூட ஃபஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘மலையான்குஞ்சு’ என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏஆர் ரஹ்மான். அந்தப் படத்திலும் குரூரமான கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் ஃபஹத். இப்போது மாமன்னன் படத்தில் மீண்டும் ஏஆர் ரஹ்மான் – ஃபஹத் கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஃபஹத் பாசில், நஸ்ரியா ஆகியோரை ஏஆர் ரஹ்மான் திடீரென சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஃபஹத் பாசிலின் நடிப்பை பார்த்து ஏஆர் ரஹ்மான் பயந்ததை கேள்விப்பட்ட நஸ்ரியா நஸிம், அவரை கூல் செய்துள்ளார். அதன்பின்னரே மூவரும் சேர்ந்து க்யூட்டாக போட்டோ எடுத்துள்ளனர்.