Thangalaan: ஆஸ்கருக்கு தங்கலான் கண்டிப்பாக போகும்.. விக்ரம் என்ன சொன்னாரு தெரியுமா!

சென்னை: இயக்குநர் பா ரஞ்சித் -நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகிவரும் படம் தங்கலான். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகி வருகிறது.

பீரியட் படமாக உருவாகிவரும் தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் மிகவும் வித்தியாசமான கெட்டப்புடன் காணப்படுகிறார். தன்னை அந்த கேரக்டருக்காக வழக்கம்போல சிறப்பாக உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தின் சூட்டிங் கேஜிஎப், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் சூழலில் இன்னும் 10 நாட்களில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர்.

தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப திட்டமிடும் படக்குழு: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் விக்ரமின் கெட்டப்புகள் படத்தில் பேசப்பட்டன. அதேபோல பொன்னியின் செல்வன் படமும் விக்ரமிற்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், விக்ரமின் ஆதித்த கரிகாலன் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். பீரியட் படமாக உருவாகிவரும் இந்தப் படம் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும்வகையில் அமைந்துள்ளது. படத்தின் டீசர், போஸ்டர்கள் ஆகியவை ரசிகர்களை மட்டுமில்லாமல் பிரபலங்களையும் வாய் பிளக்க செய்துள்ளது. சமீபத்தில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் படத்தின் விஷுவல்கள் மிரட்டலாக அமைந்துள்ளதாக தெரிவிதிருந்தார்.

இதுபோன்ற படங்கள் இந்தியில் வெளியாவதில்லை என்ற தனது ஆதங்களையும் பதிவு செய்திருந்தார். தங்கலான் படத்தின் சூட்டிங் 50 நாட்களை கடந்து கேஜிஎப்பில் படமாக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு விடுபட்ட காட்சிகளை சென்னையில் பிரம்மாண்டமான செட் போட்டு படக்குழுவினர் எடுத்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் 10 நாட்களில் நிறைவடையவுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

Actor Vikrams Thangalaan movie team plans to take the movie to Oscars

தற்போது மதுரையில் தங்கலான் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக இந்தப் படம் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் தங்கலான் படம் உருவாகியுள்ளதாகவும் படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் படக்குழு ஈடுபட உள்ளதாகவும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இதற்கான முழு ஒத்துழைப்பு மற்றும் பிரமோஷன்களை செய்ய தான் தயாராக உள்ளதாக விக்ரம் உறுதியளித்துள்ளாராம்.

இதுவரை படத்தின் 116 நாட்கள் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மதுரையில் நடந்துவரும் சூட்டிங்கில் சியான் மற்றும் மாளவிகா மோகனன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தப் படம் குறித்து மாளவிகாவும் தன்னுடைய பேட்டியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டர் ஒரு போர் வீரனுக்கான கெத்துடன் அமைந்துள்ளதாகவும் இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை தான் பார்த்தாலும் படம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக இந்தப் படத்தில் விக்ரமின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளதாகவும், படம் விக்ரம் சாரின் படமாக உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.