சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஒரு புதிய வழக்கு பாய்ந்துள்ளது. இந்த முறை அமலாக்கத்துறை அல்ல; மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. இதையடுத்து, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி நள்ளிரவில் கதறி அழுதார் செந்தில் பாலாஜி. இதன் தொடர்ச்சியாக, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு, காவேரி மருத்துவமனையில் மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதனால் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை மத்திய பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கல் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இன்று இரவு வழக்கு பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மறுபடியும் செந்தில் பாலாஜி கைது செய்யப்படக்கூடும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.