டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் – மாணவர்களுடன் சுவாரசியமாக கலந்துரையாடினார்

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக பல்கலை.நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மக்களுடன் கலந்துரையாடினார்.

ரயிலில் வந்த மாணவ, மாணவிகள், இளைஞர்களுடன் பிரதமர் சிரித்துப் பேசியவாறு பயணம் செய்தார். பிரதமர் மோடி மெட்ரோவில் பயணம் செய்ததை, பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

அதில் உள்ள ஒரு வீடியோவில் மாணவர் ஒருவருடன் பிரதமர் மோடி பேசுகிறார். நீ எங்கிருந்து வருகிறாய் என்று பிரதமர் கேட்கிறார். அதற்கு அந்த மாணவர் கூறும்போது, “நான் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து வருகிறேன்” என்று மாணவர் பதிலளிக்கிறாார். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாயா என்று பிரதமர் கேட்க, அதற்கு மாணவர், “ஆம். எனக்குத் தென்னிந்தியாவைச் சேர்ந்த சில நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து அவர்கள் மொழியில் சில வாக்கியங்களைப் பேச கற்றுக் கொண்டு வருகிறேன்’’ என்று பதிலளித்தார். இதைப் போலவே ரயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகளிடம் பிரதமர் மோடி சுவைபட பேசினார்.

மேலும் பிரதமர் நடத்தி வரும் பரீட்சா பே சர்ச்சா (தேர்வுக்கு முன் விவாதம்) நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் பிரதமரிடம் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டெல்லி பல்கலைக்கழக விழாவுக்கு செல்லும் வழியில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்தேன். டெல்லி இளைஞர்களுடனும், மக்களுடனும் பயணம் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. எனது இளைய நண்பர்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.