சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் 29ம் தேதி வெளியானது.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமன்னன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
முதல் வாரம் சிறப்பான ஓபனிங் கிடைத்த மாமன்னன் இதுவரை 23 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம்.
இந்நிலையில், மாமன்னன் படத்தை இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
மாமன்னன் படத்தை பாராட்டிய பா ரஞ்சித்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் 29ம் தேதி வெளியானது. ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனம் கிடைத்த மாமன்னன் இதுவரை 23 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதனிடையே மாமன்னன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தார் உதயநிதி. சுமார் 50 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் காரை மாரி செல்வராஜ்ஜுக்கு பரிசாக கொடுத்த உதயநிதி, மாமன்னன் படத்தின் வெற்றிக்காக அவருக்கு நன்றியும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மாமன்னன் படம் குறித்து இயக்கு பா ரஞ்சித் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “உண்மையாகவே தனித்தொகுதி MLA-க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும் அதிகாரமும் பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின்” என பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், “திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார். அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.
பா ரஞ்சித்தின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பரியேறும் பெருமாள் திரைப்படம் முதல் மாரி செல்வராஜ்ஜுக்கு சப்போர்ட்டாக இருந்துவருபவர் பா ரஞ்சித். இருவருமே தங்களின் வலியை அவர்களது படங்களில் வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மாமன்னன் படம் குறித்து பா ரஞ்சித் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.