வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
எம்.பி., – எம்.எல்.ஏ.,க் கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன.
இந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்வது தொடர்பாக, 2021 ஆக., 10ல் , உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. கடந்தாண்டு, அக்., 10ல் இதில் திருத்தம் செய்யப்பட்டது.கடந்த, 2021ல் பிறப்பித்த உத்தரவில், ‘சிறப்பு நீதிபதிகளை மறு உத்தரவு அளிக்கும் வரை, வேறு இடங்களுக்கு மாற்றக் கூடாது’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
![]() |
கடந்தாண்டு அளித்த உத்தரவில், ‘பணிக் காலம் முடிவடைவது போன்ற காரணங்களால், நீதிபதிகளை வேறு இடத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறத் தேவையில்லை’ என, குறிப்பிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், குறிப்பிடப்பட்டது.
சிறப்பு நீதிபதிகளை இடமாற்றம் செய்ய, பல உயர் நீதிமன்றங்கள் விண்ணப்பித்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த விவகாரத்தில் முந்தைய உத்தரவுகளில் சில திருத்தம் செய்யப்படுகிறது. சிறப்பு நீதிபதிகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் முன் அனுமதி தேவைஇல்லை.
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகப் பணிகள் பாதிக்காமல் இருக்க இந்த திருத்தம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில், குறிப்பிட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும். சிறப்பு நீதிபதி பதவிக்கு மற்றொருவரை நியமித்த பின், முந்தைய நீதிபதியை மாற்றலாம்.விசாரணை முடிந்து இறுதி தீர்ப்புகள் எதுவும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்த பின், இடமாற்றம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
