பாரீஸ்: பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற மோடி, அந்நாட்டின் அதிபர் உடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், அங்கே அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். முன்னதாக அவர் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் நேற்று உரையாடினார்.
அப்போது தான் அங்கே யுபிஐ சேவையைக் கொண்டு வருவது குறித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் இம்மாணுவேல் மாக்ரோனை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி: இதற்கிடையே பிரான்ஸ் நாட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் முன்னேற்றத்தில் பிரான்ஸ் ஒரு இயற்கையான பாட்னராக இருக்கிறது. இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையே உள்ள சிறப்பான பந்தம் இன்று தெளிவாகத் தெரிகிறது. முன்னேற்றத்தை நோக்கிய நமது பயணத்தில் பிரான்ஸை நாங்கள் பாட்னராகவே பார்க்கிறோம். அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாங்கள் ரெடி செய்யும் திட்டமே இரு நாடுகளும் இடையே உள்ள பந்தத்தின் சாட்சியாக இருக்கும்” என்றார்.
பிரான்சில் உள்ள இந்தியர்களுக்குப் புதிதாக நீண்ட கால விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை வரவேற்ற பிரதமர், பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அதன் வளாகங்களைத் திறக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
ரஃபேல் விமானங்கள்: பிரான்ஸ் நடந்த பாஸ்டில் தின அணிவகுப்பில் இந்திய ரஃபேல் ஜெட் விமானங்கள் மற்றும் பிரெஞ்சு ஜெட் விமானங்கள் இணைந்து வானில் பல சாகசங்களைச் செய்தன. அது தொடர்பாகப் பேசிய பிரதமர் மோடி, “எங்கள் ரஃபேல் ஜெட் விமானங்கள் இன்று செய்த சாதனைகளை நாங்கள் பார்த்தோம், மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கடற்படை கப்பல்களும் இப்போது பிரான்ஸ் துறைமுகங்களுக்கு வந்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, செமிகன்டெக்டர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் வரும் காலத்தில் ஒத்துழைக்கும். இந்த துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க புதிய வழிகள் கண்டறியப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பத்தில் விநியோகச் சங்கிலி ஜனநாயகப்படுத்தியாக வேண்டும்.
கொரோனாவால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக தெற்காசிய நாடுகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடினமான காலங்களில் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் மற்றும் ஆதரிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
சீனா: தொடர்ந்து சீனாவை மறைமுகமாகத் தாக்கும் வகையில் பேசிய மோடி, “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்தியா மற்றும் பிரான்சுக்குச் சிறப்புப் பொறுப்பு உள்ளது. அனைத்து மோதல்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்குக் கடுமையான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையே ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்,
இந்தப் பயணத்தில் பாதுகாப்பு தொடங்கி பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.