இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி அதிக முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் அடித்தது பலமான நிலையில் இந்தியா இருக்கிறது. ஆனால், இப்போட்டியில் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிரத்வெயிட்டின் பந்துவீச்சு முறையானதாக இருக்கிறதா? என விராட் கோலி யஷஸ்வி ஜெய்ஷ்வாலிடம் கேட்டது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.
விராட்கோலி நிதான ஆட்டம்
டொமினிகாவில் நடந்து வரும் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், வாரிக்கனால் சுப்மான் கில் அவுட்டானார். இதனையடுத்து, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கிரீஸுக்கு வந்தார். அவர் மிகவும் நிதானமாக விளையாடினார். அவர் தனது இன்னிங்ஸின் 81வது பந்தில் தான் முதல் பவுண்டரியை அடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடியும் வரை ஆட்டமிழக்காத விராட் கோலி, 96 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவரின் செய்கை இப்போது சர்ச்சையாகியுள்ளது.
பந்துவீச்சு மீது அதிருப்தி
மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கிரெய்க் பிராத்வைட்டின் பந்துவீச்சில் விராட் கோலி திருப்தி அடையவில்லை. அவரின் பந்துவீச்சு முறையற்றதாக விராட் கோலி நினைக்கிறார். இது குறித்து அவர் ஸ்டம்ப் மைக்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் புகார் செய்ததாகக் கூறப்படுகிறது. ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ள அந்த உரையாடலில், முறையாக பந்துவீச்சுபோல் தெரியவில்லையே என கேட்டுள்ளார். இதுதான் இப்போது சர்ச்சைக்கு காரணமாகும். ஆனால் இது குறித்து இந்திய அணி இதுவரை ஐசிசியிடம் புகார் அளிக்கவில்லை.
பிராத்வைட் மீது புகார்
பிராத்வைட்டின் பந்துவீச்சு குறித்த கேள்விகள் எழுவது இது முதல் முறையல்ல. உண்மையில், 2019-ல் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, பிரத்வைட் பந்துவீச்சு நடவடிக்கை குறித்து விராட் கோலி புகார் அளித்தார். இது மட்டுமின்றி, 2017-ம் ஆண்டிலும் அவரது நடவடிக்கை குறித்து புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் ஐசிசி எந்த தவறும் செய்யவில்லை எனவும், பிராத்வைட்டின் செயல் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் இருப்பதாக தெரிவித்துவிட்டது.
ஐசிசி விதி சொல்வது என்ன?
கிரிக்கெட் விதிமுறைகளின்படி, ஒரு பந்துவீச்சாளரின் முழங்கை கோணம் 15 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும், பந்தை வெளியிட பந்துவீச்சு கையை அடையும் இடத்திலிருந்து அளவிடப்படுகிறது. பிராத்வைட்டின் இந்த செயலை நடுவர்களிடம் கோஹ்லி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆன்-பீல்ட் பார்ட்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் மட்டுமே கேட்டிருக்கிறார். போட்டிக்குப் பிறகு புகார் அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.