ம.பி.யில் 2 தக்காளிக்காக ஏற்பட்ட சண்டையில் கணவனை பிரிந்த மனைவி: போலீஸார் தலையிட்டு சேர்த்து வைத்தனர்

போபால்: ம.பி.யில் ஒரு கறியில் கூடுதலாக 2 தக்காளிகளை கணவன் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை விட்டுப் பிரிந்தார். அவரை சமாதானப்படுத்திய போலீஸார் நேற்று கணவனுடன் சேர்த்து வைத்தனர்.

நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல் மற்றும் கடைகளில் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளி விலை உயர்வால் தம்பதிகள் பிரிந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்தது.

இம்மாநிலத்தின் ஷாதோல் மாவட்டம், தான்புரியை சேர்ந்தவர் சஞ்சீவ் வர்மா. இவரது மனைவி ஆர்த்தி. கணவன் – மனைவி இருவரும் அப்பகுதியில் சிறு ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை ஒரு கறியில் கூடுதலாக 2 தக்காளிகளை சஞ்சீவ் பயன்படுத்தியதை கண்டு ஆர்த்திஆத்திரமடைந்தார். தக்காளி விற்கும் விலையில் 2 தக்காளிகளை வீணடித்து விட்டதாக சத்தம் போட்டார். இதனால் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கணவனிடம் சொல்லாமல் தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார் ஆர்த்தி.

அவரை கண்டுபிடித்து தருமாறு தான்புரி காவல் நிலையத்தில் முறையிட்டார் சஞ்சீவ். அடுத்த சில மணி நேரத்தில் ஆர்த்தி அவரது சகோதரி வீட்டில் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஆர்த்தியை சமாதானப்படுத்திய போலீஸார் அவரை நேற்று கணவனுடன் சேர்த்து வைத்தனர்.

அப்போது ஆர்த்திக்கு அரை கிலோ தக்காளியை பரிசாக வழங்கிய சஞ்சீவ், இனி அவரிடம் கேட்காமல் தக்காளியை எடுக்க மாட்டேன் என சபதம் செய்தார்.

மேலும் மனைவியிடம் கேட்கா மல் எந்தவொரு முடிவும் எடுக்க மாட்டேன் என உறுதி அளித்தார்.

இதையடுத்து “இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், சிறிய தவறுகளை ஒருவருக்கொருவர் புறக்கணிக்க வேண்டும்” என போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.