கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: யார் யாருக்கு என்னென்ன பணிகள்?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை எந்த சிறு தடங்கலும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பாக தகுதியான பயனாளர்களை கண்டறிந்து வங்கி கணக்கு எண்கள் பெறப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். இரண்டு மாதங்கள் இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் தகுதியான ஒரு கோடி பேரை கண்டறிந்து அவர்கள் விவரங்களை முறையாக சேகரித்து வைப்பது சவாலான காரியம் தான் என்கிறார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பல்வேறு துறைகள் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுகின்றன. ஒவ்வொரு துறைக்கும் என்னென்ன பணிகள், தலைமைச் செயலாளர் முதல், பிறதுறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பிறதுறை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் என அரசு இயந்திரமே இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தகுதியான பயனாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் அந்தந்த ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடங்க உள்ள நிலையில் ஜூலை 20ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற உள்ளது.

மகளீர் உரிமை தொகை வழங்குவது குறித்து சிறப்பு பயிற்சி

இந்நிலையில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் என்னென்ன பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் மாநில அளவில் இந்த திட்டத்தை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில் வளர்ச்சி ஆணையர் இருப்பார். நிதித்துறை, சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை, வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் செயலாளர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மாவட்ட அளவில் ஒரு குழுவும், வட்ட அளவில் ஒரு குழுவும் செயல்படும்.

மாவட்ட அளவில் செயல்படும் குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகிப்பார். வட்ட அளவில் நடைபெறும் குழுவில் வட்டார வருவாய் கோட்டாட்சியர் தலைமை வகிப்பார்.

இந்த குழுக்களிலும் காவல்துறை உள்ளிட்ட பிற துறை சார்ந்த அதிகாரிகள், அரசு அலுவலர்கள் இருப்பார்கள்.

மாவட்ட ஆட்சியர்கள் திட்டத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் முன்னேற்ற அறிக்கையை மாநில கண்காணிப்புக் குழுவுக்கு அளிப்பார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு பணி அலுவலரான இளம் பகவத் ஐ ஏ எஸ் மாநில கண்காணிப்பு குழுவிற்கு திட்ட செயல்பாடுகள் குறித்து தொகுப்பு அறிக்கை அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.