பெங்களூரு ஸ்டேஜ் ரெடி… ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்… 2வது கூட்டத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

பாட்னா கூட்டத்திற்கு பின்னர் நடக்கும் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம். இதற்காக பெங்களூரு படுஜோராக தயாராகியுள்ளது. ஒட்டுமொத்த ஊடகங்களின் கவனமும் தெற்கை நோக்கி திரும்பியுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமெனில் பெங்களூருவில் குவிந்துள்ளன. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்

இதனை பிரதான கட்சிகளும் உணர்ந்து வைத்திருக்கின்றனர். எனவே தான் தேசிய அளவில் ஒன்று கூடி எதிர்க்க முடிவு செய்துள்ளனர். இதில் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை ஓரங்கட்டி வைத்து விட்டு ஒருமித்த நிலையில் கைகோர்க்க வேண்டும். முதல் கூட்டத்திலேயே ஆம் ஆத்மி முரண்டு பிடித்தது.

காங்கிரஸ் ஆதரவு

டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் கூட்டத்திற்கு வருவோம் எனத் தெரிவித்திருந்தனர். கடைசி வரை நீடித்த சஸ்பென்ஸ் ஒருவழியாக அரவிந்த் கெஜ்ரிவால் வந்ததால் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்ததை அடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் இன்று கூடுகின்றன.

பொன்முடி வீட்டில் ரெய்டு

அதுமட்டுமின்றி கூட்டம் நடக்கும் நாளன்றே தமிழகத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய பரபரப்பிற்கு மத்தியில் இரண்டு நாட்கள் கூட்டம் பெங்களூருவில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், சோனியா காந்தி பங்கேற்கிறார்.

ஆம் ஆத்மி வருகை

டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் ஆம் ஆத்மி எந்தவித சர்ச்சையும் இன்றி கலந்து கொள்கிறது. முதல் கூட்டத்தில் பங்கேற்காத ராஷ்டிரிய லோக் தள் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி பங்கேற்கிறார்.

ஸ்டாலின் புறப்பாடு

சற்றுமுன் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டார். கடந்த முறை செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் இல்லை. விமானத்தை பிடிக்க அவசரமாக கிளம்பி விட்டார். இம்முறை இடம்பெறுவார் எனத் தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக 23 கட்சிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு விருந்தை கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ஏற்பாடு செய்துள்ளார்.

பாஜகவை வீழ்த்த வியூகம்

எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு தயாராவதற்கு முன்பு இன்னும் பலகட்ட ஆலோசனைகளை நடத்தவுள்ளன. அதுவரை ஒவ்வொரு கட்சியின் முரண்பாடுகளும் படிப்படியாக விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் பாஜக அரசின் தோல்விகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பது தொடர்பான வியூகங்கள் முதல் தொகுதி பங்கீடு வரை ஒவ்வொன்றாக முடிவெடுப்பர் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.