இம்பால்: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் வீட்டை பெண்களே இடித்து தீவைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது
வெளியாகி உள்ளது. இந்த வேளையில் பெண்கள் தங்களின் முகத்தை துணியால் மூடியிருந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பழங்குடியினர் பிரிவில் குக்கி இன மக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பழங்குடியினர் பட்டியில் இணைக்க மைத்தேயி பிரிவினர் கூறி வருகின்றனர்.
ஆனால் மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.
இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் நேற்று முன்தினம் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த வீடியோ உலுக்கி உள்ளது.

இந்த 2 பழங்குடியின பெண்களை மைத்தேயி மக்கள் தான் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் பலாத்காரம், கடத்தல் உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய, மாநிலத்தை ஆளும் பாஜக அரசுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மணிப்பூர் வன்முறை குறித்து நேற்று முதல் முறையாக பிரதமர் மோடி கூறுகையில், ‛‛மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் கோபம் நிரம்பி இதயம் வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். இதனை சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது” என தெரிவித்தார். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் விவாதிக்ககோரி இன்று 2வது நாளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்றது தொடர்பாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹைரேம் ஹீரோதாஸ் என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். 32 வயது நிரம்பிய இவர் பச்சை நிறத்தில் டீசர்ட் அணிந்து குற்றத்தில் ஈடுபட்டு இருந்தார். இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் அறிவித்தனர். மேலும் அவரது போட்டோவையும் போலீசார் வெளியிட்டனர்.

இந்நிலையில் தான் ஏராளமான பெண்கள் அவரது கையில் கட்டையுன் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை மறைக்கும் வகையில் துணி கட்டியிருந்தனர். ஹைரேம் ஹீரோதாஸின் வீடு வெறும் மண் வைத்து கட்டப்பட்டு இருந்தது. அந்த வீட்டை கட்டையை கொண்டு பெண்கள் இடித்தனர். மேலும் வீட்டுக்கு தீவைத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.