கோவை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள வேம்பு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (34). இன்ஜினியரிங் டிசைனர். இவரது மனைவி லக்ஷயா. குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்தார்.

இவர்களுக்கு ரக்ஷிதா(10) என்ற மகள் உள்ளார். ராஜேஷின் தாயார் பெயர் பிரேமா(73). கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் வீடு கதவு திறக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று (22-ம் தேதி) இரவு இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வடவள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அருகே லக்ஷயா, ரக்ஷிதா, பிரேமா ஆகியோர் விஷம் அருந்திய நிலையம் சடலமாக கிடந்தனர். போலீஸார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

> அவசியமற்ற அதீத ‘முடிவு’… ‘வேறு வழி இல்லை’ என்ற எண்ணம் தவறு! – குடும்பத்தில் கடன் நெருக்கடியும் தீர்வுகளும்

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.