நய்பிடாவ்: மியான்மரில் இன்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக மியான்மர் உள்ளது. மிகவும் சிறிய நாடான மியான்மர் இந்தியா, சீனா, தாய்லாந்து, வங்கதேசத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில் தான் இன்று இரவு மியான்மரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை, நிலஅதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‛‛மியான்மரில் உள்ளூர் நேரப்படி இரவு 10.01 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கம் எந்த வகையான தாக்கத்தை மியான்மரில் ஏற்படுத்தியது என்பது பற்றிய எந்த தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இருப்பினும் தற்போதைய நிலநடுக்கத்தால் அதிகாரிகள் உஷாராகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.