சென்னை: வடக்கு ஆந்திரா அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் மேற்கு திசை காற்று காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 26-ம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.
அவலாஞ்சியில் 38 செமீ மழை: 25-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அங்கு 38 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 12 செமீ, நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 11 செமீ, வொர்த் எஸ்டேட், தேவாலா, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
வடக்கு ஆந்திரா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 26-ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும்அதனை ஒட்டிய மத்திய மேற்குவங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியதென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.