தாய்லாந்து: பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து – 9 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

பாங்காங்,

சனிக்கிழமையன்று தாய்லாந்தில் பட்டாசுக் கிடங்கில் வெடித்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு மாகாணமான நாராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது வெல்டிங் செய்ததால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நாராதிவாட் கவர்னர் சனன் பொங்கக்சோர்ன் கூறுகையில், “சுங்கை கோலோக்கில் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த ஒரு கிடங்கு இன்று மதியம் வெடித்தது, இந்த விபத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளது. கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், ஸ்டீல் வெல்டிங் செயல்பாட்டின் போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே காரணம் என்று முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது” என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக உள்ளூர் ஊடகங்களில் வெளியான காட்சிகளில், காற்றில் பெரும் புகை மூட்டம் எழுவதையும், பயங்கர வெடி விபத்தினால் ஏராளமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் மோசமாக சேதமடைந்ததையும் காட்டியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.