ஜெயிலர் பட வாய்ப்பை தவிர்த்த மம்முட்டி ; அதற்கு பதிலாக நடித்தது யார் தெரியுமா ?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் வழக்கம்போல முழு ரஜினிகாந்த் படம் என்று மட்டுமே சொல்ல முடியாத அளவிற்கு இந்த படத்தில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ் குமார், பாலிவுட்டில் இருந்து ஜாக்கி ஷெராப் என மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதைக்கு இவர்கள் தேவை என்பதால் மட்டுமே நெல்சன் திலீப்குமார் இவர்களை தேர்வு செய்துள்ளார். “படத்தின் கதைக்காக இவர்கள் நடிக்க ஒப்புக் கொண்டார்களா என்பது தெரியாது, ஆனால் ரஜினிக்காக நிச்சயமாக ஒப்புக் கொண்டிருப்பார்கள்” என்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே நெல்சன் திலீப்குமார் பேசினார்.

இவர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகில் இருந்து நடிகர் சுனில் மற்றும் மலையாள திரையுலகில் இருந்து வில்லன் நடிகர் விநாயகன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதேசமயம் இந்தப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மம்முட்டியையும் அணுகியுள்ளார் நெல்சன் திலீப்குமார். ஆனால் மோகன்லால் கதாபாத்திரத்திற்காக அல்ல.. இந்த படத்தில் விநாயகன் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்திற்காகத் தான். அந்த கதாபாத்திரமும் மிகவும் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

அதனாலேயே மம்முட்டியை அணுகினாராம் நெல்சன் திலீப்குமார். ஆனாலும் தான் பல படங்களில் பிசியாக நடித்து வருவதை காரணம் காட்டி இந்த படத்தில் நடிக்க இயலவில்லை என மம்முட்டி தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கூட நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, மம்முட்டியின் பெயரை குறிப்பிடாமல் வேறு ஒரு பிரபல நடிகர் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.