இனி அரசியலுக்கு முக்கியத்துவம்: பாஜகவில் இணைந்த ஜெயசுதா சொல்கிறார்

1970களில் அறிமுகமாகி 90 வரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில் நடந்த அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

தேர்தலில் தோல்வி அடைந்ததால் கட்சி தன்னை புறக்கணிப்பதாகவும், தோற்கடித்ததும் காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம்சாட்டி பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதிலிருந்து விலகி தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டில்லியில் உள்ள பா.ஜ.க. மத்திய அலுவலகத்தில் தெலுங்கானா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தருண் சுக், மாநில தலைவர் ஜி.கிஷன் ரெட்டி, தேசிய துணைத் தலைவர் டி.கே.அருணா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து ஜெயசுதா கூறும்போது “பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால தலைமையின்கீழ் நாட்டின் முன்னேற்றம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் என்னை பா.ஜ.க.வில் சேரவைத்தது. மாற்றத்தை விரும்பும் உணர்வாலேயே நான் இந்தக் கட்சியில் இணைந்துள்ளேன். இனிமேல் நான் நடிப்பைவிட அரசியலுக்கே முக்கியத்துவம் அளிப்பேன் ” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.