நீட் விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்… ஆளுநர் ஆர்என் ரவி திட்டவட்டம்!

தமிழக ஆளுநரான ஆர் என் ரவி, எண்ணி துணிக என்ற பெயரில் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் இளநிலை நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.

அப்போது சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை:
” நீட் தேர்வுக்கு எங்களால் அதிக பணம் செலவு செய்யமுடிவில்லை, நீட் தேர்வு இல்லாமலேயே தமிழக மாணவர்கள் மருத்துவத்துறையில் பல சாதனைகள் புரிந்துள்ளனர். எனவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியுமா?”
என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஆளுநர் ஆர்.என் ரவி, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக் குறியாக்கும் என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கம் அளித்தார்.

மேலும் நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், பள்ளியில் படிக்கும் போதே மாணவர்களை அதற்கு தயார் செய்யலாம் என்றும் கூறினார். நீட் தேர்வு தொடர்பாக நடக்கும் மரணங்களை தமிழக அரசு அரசியலாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வு இல்லாமல் மருத்துவத்துறையில் தமிழக மாணவர்கள் பெரிதாக எந்த சாதனையும் செய்யவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தார். நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவி, இப்படி அதிரடியாக பேசியிருப்பது பெரும் பேசு பொருளாகியுள்ளது.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகினற்ன. ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.