மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை… மத்திய அரசு வெளியிட்ட புது அறிவிப்பு..

இப்போது வரும், அப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைகளை சுற்றி சர்ச்சைகள் இன்னும் சர்ச்சைகள் சுழன்ற வண்ணம்தான் உள்ளன. தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மதுரை எய்ம்ஸுடன் அறிவிக்கப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் கூட இதுவரை தொடங்கப்படவில்லை.

இதுதொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. தற்போதைய அமைச்சர் உதயநிதி, 2021 சட்டமன்றத் தேர்தலில் எய்ம்ஸ் எனக் கூறி செங்கல்லை காட்டி பிரச்சாரம் செய்தார். ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படாதற்கு மாநில அரசுதான் காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் குற்றம்சாட்டினார்.

கட்டுமானமே இன்னும் தொடங்கப்படாத நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், “மதுரை எய்ம்ஸ் பணிகளுக்காக ஜப்பானைச் சேர்ந்த ஜெய்கா நிறுவனத்திடம் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு கடன் தொகை பெற்றுள்ளது. தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் செப்டம்பர் 17ஆம் தேதிக்குள் டெண்டர் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. 33 மாதங்களுக்கு கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் விரைவில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.