சென்னை:
சென்னை நோக்கி வந்த ரயிலில் ஏசி பெட்டியில் ஏசி வேலை செய்யாததால் கடுப்பான பயணிகள், பாதி வழியிலேயே ரயிலை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒருகாலத்தில் எல்லாம் ரயில்களில் பயணம் செய்பவர்களும் சரி.. பேருந்தில் பயணம் செய்பவர்களும் சரி.. எந்த அசெளகரியம் ஏற்பட்டாலும் அதை பொறுத்துக் கொண்டு செய்வர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அனைவருக்கும் தங்கள் உரிமைகள் தெரியத் தொடங்கிவிட்டன. நாம் பணம் கொடுத்து பெறும் சேவையில் ஏன் அசெளகரியத்தையும், கஷ்டங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது.
இதனால் அரசாங்கத்தையும், அரசு நிறுவனங்களையும் மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில், ரயில்வே அதிகாரிகளை பயணிகள் தெறிக்கவிட்ட சம்பவம் தற்போது நடந்திருக்கிறது. செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று புறப்பட்டு வந்தது. அப்போது ரயிலில் உள்ள ஏசி பெட்டிகளில் M5 பெட்டியில் ஏசி சுத்தமாக வேலை செய்யவில்லை. ஏசி பெட்டி என்பதால் ஜன்னல், கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில், பயணிகளுக்கு வியர்த்துக் கொட்டியுள்ளது.
இதனால் எரிச்சல் அடைந்த பயணிகள், அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர்களிடம் புகார் அளித்தனர். ஆனால் அவர்களோ இன்னும் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் எனக் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் சில மணிநேரங்கள் கடந்தும் ஏசி வரவில்லை. இதனால் பொறுமையிழந்த பயணிகள், அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வேறு ஏசி பெட்டியில் சீட் ஒதுக்கி தருமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், திருவாரூர் ரயில் நிலையம் வந்ததும் ஏசியை சரி செய்கிறோம் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, பயணிகள் ரயிலில் ஏறி அமர்ந்தனர். பின்னர் திருவாரூர் ரயில் நிலையத்தில் ஏசி சரி செய்து தரப்பட்டது. ஏசி வராததால் பயணிகள் ரயிலை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.