கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டர் எதிர்கொண்ட சிக்கல் – அடுத்து நடந்தது தான் ஹைலைட்!

சந்திரயான் 3 விண்கலம் இன்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது இந்தியா. நிலவின் தென்துருவத்தில் உள்ள வெப்பநிலை மற்றும் மண்ணின் தன்மை குறித்து சந்திரயான் 3 ஆய்வு செய்ய உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து இன்று மாலை நிலவில் தரையிறங்கியது. கடந்த 17 ஆம் தேதி விக்ரம் லேண்டர், உந்து விசை கலனில் இருந்து பிரிந்தது. தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலவை நெருங்கி வந்தது விக்ரம் லேண்டர்.

இதன் இறுதிக்கட்ட பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை 5.44க்கு விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கியது. 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டப்படி தரையிறங்கியது.

இந்நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 17 நிமிடங்கள் இருந்த நிலையில் பெரும் இடர் ஒன்றை சந்தித்ததாக மூத்த விஞ்ஞானியான டிவி வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வெங்கடேஷ்வரன், இந்த தகவலை கூறியுள்ளார். அதாவது, “விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு சரியாக 17 நிமிடங்கள்… தரையிறங்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆபத்து இருப்பதாக லேண்டரில் உள்ள இடர் உணர் பகுதி செயற்கை நுண்ணறிவு மூலம் தெரியப்படுத்தியது.

கடைசி நேரத்தில் தரையிறங்கும் இடத்தில் ஆபத்து இருப்பதாக செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல் வந்ததையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கலக்கமடைந்துவிட்டார்கள். நீங்கள் அவர்களின் முகத்தை கவனித்திருந்தால் தெரிந்திருக்கும், அவர்களின் முகம் இருக்கமாக இருந்தது. பின்னர் அந்த இடத்தைவிட்டு சற்று நகர்த்தப்பட்டு விக்ரம் லேண்டர் நல்ல படியாக தரையிறக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவால் தரையிறங்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆபத்து கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. இன்னும் 4 மணி நேரத்திற்கு பிறகுதான் ரோவர் வெளியில் வரும். லேண்டர் தரையிறங்கும்போது ஏற்பட்ட புழுதி அடங்கியதும் ரோவர் வெளி வரும்” இவ்வாறு மூத்த விஞ்ஞானியான டிவி வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.