மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தின் பல்வேறு நலனுதவிகள் பகிர்ந்தளிப்பு

உலக உணவுத் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, கிரான் மற்றும் ஏனைய பிரதேச மக்களுக்கான நலனுதவித் திட்டங்கள் (21) வழங்கப்பட்டன.

இதனடிப்படையில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் உலக உணவுத் திட்டத்தினால் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ். சுதாரன் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது 08 சிறிய ரக களை நீக்கும் உழவு உயந்திரங்கள், 04 நிலக்கடலை கோது நீக்கி இயந்திரங்கள், விவசாயத்திற்கான நீர் குழாய்கள் போன்றவை கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, இலங்கைக்கான உலக உணவு திட்ட பணிப்பாளர் அப்துல் ரகிம் சித்திக்கி மற்றும் ஜனாதிபதி செயலக உலக உணவுத் திட்ட பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்சன ஜயவர்த்தன ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மட்டக்களப்பு ஆயித்தியமலை 4ம் கட்டை பிரதேசத்தில் சுமார் 25 இலட்சம் பெறுமதியான ஜஸ் கட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது.

இத்தொழிற்சாலையில் இரவு நேரங்களில் பிடிக்கப்படும் மீன்களை சேகரிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதுடன், இதனால் பெருமளவான மீனவ குடும்பங்கள் நன்மை பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், சமுர்த்திப் பயனாளிகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பங்கள் போன்றவற்றிற்கு உலர் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வு கிரான் பிரதேச செயலக பிரிவில் புலிபாய்ந்தகல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் 24 கிலோ அரிசி, 20 கிலோ பருப்பு மற்றும் 5 லீற்றர் சமையல் எண்ணெய் உள்ளடங்கிய உணவுப்பொதி 297 குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் போசாக்குத் தரத்தைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கான சத்துணவுகள் மற்றும் திரிபோசா என்பனவும் வழங்கப்பட்டன.

இதுதவிர கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி வள்ளிபுரம் கணகசிங்கத்தின் பங்குபற்றுதலுடன் விவசாயபீட மாணவர்களுடன் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய வேளாண்மை வணிகம் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு உலக உணவுத்திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.