புதுடில்லி: ‘நியாயமான காரணமின்றி, பெற்றோரிடம் இருந்து பிரிந்து வரும்படி கணவனை, மனைவி தொடர்ந்து வற்புறுத்துவது, அவரை கொடூரமாக சித்ரவதை செய்வதற்கு சமம்’ என, வழக்கு ஒன்றில் புதுடில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வாக்குவாதம்
அதில், ‘தன் மனைவி அடிக்கடி சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதாகவும், முதியவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை’ எனவும் கூறிஇருந்தார்.
இதை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அந்த நபர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பொதுவாக, திருமணமான எந்த ஆணும், தன் பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை விட்டுப் பிரிந்து வாழ வேண்டும் என விரும்ப மாட்டார்கள்.
இந்த வழக்கில், பெற்றோரைப் பிரிந்து கணவன் தனியாக வர, எந்த நியாயமான மற்றும் வலுவான காரணங்களையும் மனைவி குறிப்பிடவில்லை. தனியாக வாழ வேண்டும் என்று விடாப்பிடியாக மனைவி வற்புறுத்துவது, கணவனுக்கு செய்யும் கொடூரமான சித்ரவதை.
பெற்றோருக்கு வயதாகும் போது, அவர்களை கவனிக்க மகனுக்கு தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமை உள்ளது. முறையான வாதங்கள், காரணங்கள் இருந்தால் மட்டுமே, குடும்ப உறுப்பினர்களை பிரிந்து, கணவனுடன் மனைவி வாழலாம்.
கலாசாரம்
மேற்கத்திய நாடுகளில் தான், திருமணத்திற்கு பின் பெற்றோரை பிரிந்து செல்வர். இந்த கலாசாரம் நம் நாட்டில் கிடையாது.
இந்த வழக்கை பொறுத்தவரை, 2007 முதல் கணவன் – மனைவி பிரிந்து வாழ்வதால், விவாகரத்து அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்