கேரளாவில் பயங்கரம்.. மலைப் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 9 பேர் பலி.. முழு விவரம்

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் மலைப்பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் கேரளா முழுவதுமே மலைப் பள்ளத்தாக்குகள் அதிக அளவில் இருக்கும். அதேபோல, செங்குத்தான மலைப் பாதைகளும், ஹேர்பின் வளைவுகளும் நிறைய இருக்கும். இதனால் அங்கு அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும். அந்த வகையில், கேரள மாநிலம் வயநாட்டில் இன்று பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

வயநாட்டில் உள்ள தாலப்புழா என்ற இடத்தில் தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. இங்கு வேலை செய்யும் தேயிலை தொழிலாளர்கள் தினசரி மாலை ஜீப் அல்லது அங்கு செல்லும் வேன்களில் ஏறி வீடு திரும்புவது வழக்கம். அந்த வகையில், இன்று மாலை 4 மணிக்கு 12 தேயிலை தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு ஜீப் சென்றுள்ளது.

அந்தப் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், மேடும் பள்ளமுமாக இருந்துள்ளது. மேலும், பல கொண்டை ஊசி வளைவுகளும் அந்தப் பாதையில் இருந்துள்ளன. இந்நிலையில், மணத்தவாடி பகுதி அருகே மாலை 4.30 மணியளவில் ஜீப் சென்ற போது திடீரென ஒரு கொண்டை ஊசி வளைவில் உள்ள பாறையில் ஜீப் பயங்கரமாக மோதியது.

இதனால் நிலைத்தடுமாறிய ஜீப் அங்கிருந்து 25 மீட்டர் அழத்திலான மலைப்பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் அந்த ஜீப் இரண்டு துண்டுகளாக சிதறியது. இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களில் 6 பேரின் பெயர் விவரம் தெரியவந்துள்ளது. ராணி, சாந்தி, சின்னம்மா, லீலா, ரபியா, ஷீஜா ஆகியோரின் பெயர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. உயிரிழந்தவர்கள் அனைவரும் மக்கிமாலா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.