மாநாட்டின் முதல் நாளான நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
Live Updates
-
9 Sep 2023 11:42 PM GMT
ஜி-20 மாநாட்டுக்கு இடையே ஜப்பான் பிரதமரையும் சந்தித்தார் பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடனும் சந்திப்பு நடந்தது.
ஜி-20 உச்சி மாநாடு
தலைநகர் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதைப்போல வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் ஆகியோரையும் தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேற்று சந்தித்தார். ஜி-20 மாநாட்டின் முதல் அமர்வுக்குப்பின் இந்த சந்திப்பு நடந்தது.
‘நமேஸ்தே’ கூறிய ரிஷி சுனக்
அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக பிரதமர் மோடியை சந்திக்க வந்த ரிஷி சுனக், ‘நமஸ்தே’ எனக்கூறி பிரதமருக்கு வணக்கம் செலுத்தினார்.
இந்த சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில், ‘ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். ஒரு வளமான மற்றும் நிலையான பிரபஞ்சத்துக்காக இரு நாடுகளும் தொடர்ந்து உழைக்கும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
ஜப்பான் பிரதமர்
இதைப்போல ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். மாநாட்டுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு இருந்தார்.
இதுகுறித்து அவர், ‘பிரதமர் கிஷிடாவுடன் ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தினேன். இந்தியா-ஜப்பான் இருதரப்பு உறவுகள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் மற்றும் ஜப்பானின் ஜி-7 தலைமைத்துவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பணிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பு, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்’ என கூறியுள்ளார்.
இத்தாலி பிரதமருடன் சந்திப்பு
பின்னர் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், ‘பிரதமர் ஜியார்ஜியா மெலோனியுடன் சிறப்பான சந்திப்பு நிகழ்ந்தது. வர்த்தகம், பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பல துறைகளை சார்ந்து எங்கள் பேச்சுவார்த்தை இருந்தது. உலக நலனுக்காக இந்தியாவும், இத்தாலியும் இணைந்து செயல்படும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வாறு மாநாட்டுக்கு இடையே 15-க்கும் மேற்பட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
9 Sep 2023 11:32 PM GMT
ஜனாதிபதி அளித்த விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
டெல்லியில் ஜி-20 மாநாட்டு அரங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த இரவு விருந்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இரவு விருந்து
ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதான பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று உள்ளனர்.
இந்த மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின்
ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பேரில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் ஒரு மணிக்கு டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.30 மணி அளவில் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தார்.
விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாடு இல்லத்தில் போலீஸ் மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், மாலை வரை அறையில் ஓய்வெடுத்தார்.
பின்னர் மாலை 5.45 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து விருந்து நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். வேட்டி- சட்டை அணிந்து சட்டைக்கு மேல், அரை கோட்டு அணிந்திருந்தார். அதிகாரிகள் அவரை நாடாளுமன்ற வளாகம் வரை கொண்டு விட்டனர். இதைப்போல பிற மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகள் நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்றனர்.
இன்று திரும்புகிறார்
பின்னர் அங்கிருந்து சிறப்பு வாகனம் மூலம் பிரகதி மைதானத்துக்கு அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு முதலில் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு விருந்து தொடங்கியது. இதில் பங்கேற்றபின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகம் வந்து பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு அரசு இல்லம் திரும்பினார்.
இரவில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.50 மணி விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
-
9 Sep 2023 11:14 PM GMT
பாரத் மண்டபத்தில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து
ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரவு விருந்து வழங்கினார்.
நாளந்தா பல்கலைக்கழகம்
டெல்லியில் நடந்து வரும் ஜி-20 உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று பல்வேறு அமர்வுகள் நடந்தன. அத்துடன் மாநாட்டு பிரகடனமும் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு விருந்து வழங்கினார். இதற்காக பாரத் மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் புகைப்படத்தை பின்புலமாக கொண்டு விருந்து அரங்கின் நுழைவாயில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் ஒருபுறம் உச்சி மாநாட்டின் லோகோவும், மறுபுறம் மாநாட்டின் கருப்பொருளும் இடம் பெற்றிருந்தன.
தலைவர்கள் வியப்பு
விருந்து நடைபெற்ற அரங்குக்கு வந்த தலைவர்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் நாளந்தா பல்கலைக்கழக புகைப்படங்களை பார்வையிட்டு, பழங்கால இந்தியர்களின் கல்விப்புலமையை எண்ணி வியந்தனர்.
5 மற்றும் 12-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பீகாரில் இயங்கி வந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்பை அவர்களுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மை, தகுதி, சிந்தனை சுதந்திரம், கூட்டு நிர்வாகம், சுயாட்சி மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுடன் ஒத்துப்போவதாக பிரதமர் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட ஜி-20 தலைவர்கள் வியப்பை வெளியிட்டனர். குறிப்பாக நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்பை அறிந்து கொள்வதில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் அதிக ஆர்வம் காட்டியதை காண முடிந்தது.
அர்ப்பணிப்புக்கு சான்று
உலக அளவில் உருவான ஆரம்பகால சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகப் புகழ் பெற்ற நாளந்தா, இந்தியாவின் மேம்பட்ட கல்வியின் நீடித்த சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
மகாவீரர் மற்றும் புத்தரின் சகாப்தத்திற்கு முந்தைய மரபை கொண்ட இந்த பல்கலைக்கழகம் மக்களின் புலமையை வளர்ப்பதிலும், அறிவைப் பரப்புவதிலும் பண்டைய இந்தியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
இந்தியாவின் ஜி-20 உச்சி மாநாட்டின் கருப்பொருளான வாசுதெய்வ குடும்பகம் என்ற உலகளாவிய பிணைப்பைக் கொண்டு இணக்கமான உலக சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பிற்கு வாழும் சான்றாகவும் இருந்தது என்பது சிறப்புக்குரியதாகும்.
-
9 Sep 2023 10:32 PM GMT
ஜனாதிபதி விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள்
ஜி-20 மாநாட்டையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விருது அளித்தார். இந்த விருந்தில் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றின் கலவையான பாரதம் வெளிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சுவை அனைவரையும் இணைக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
விருந்தின் தொடக்க உணவாக ‘புதிய காற்றின் சுவாசம்’ என்ற உணர்வில் தினை இலை, தயிர் உருண்டை மற்றும் பால், கோதுமை, கொட்டைகள் வழங்கப்பட்டன. மசாலா சட்னியும் வழங்கப்பட்டது.
முதன்மை உணவாக வனவர்ணம் அதாவது ‘மண்ணில் இருந்து வலிமை’ என்ற உணர்வில் பளபளப்பான வன காளான்களுடன் சேர்ந்த பலாப்பழ துண்டுகள், முறு முறு சிறு தானியங்கள் மற்றும் கறிவேப்பிலை கலந்த கேரள சிவப்பு அரிசி சோறு, இவற்றுடன் இந்திய பிரட்டுகள், மும்பை பாவ், வெங்காய விதையின் சுவை கொண்ட பால் மற்றும் கோதுமை சேர்ந்த மென்மையான ரொட்டி, ஏலக்காய் சுவை கொண்ட இனிப்பு ரொட்டி ஆகியவை பரிமாறப்பட்டன.
இறுதியாக ‘பொன் பானை’ என்ற உணர்வில் ஏலக்காய் வாசனையுள்ள தினை புட்டு மற்றும் பால், சிறுதானியங்கள், கோதுமை கலந்த இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன.
பானங்களைப் பொறுத்தவரை காஷ்மீரி காவா, பில்டர் காபி, டார்ஜிலிங் டீ போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சாக்லெட் பீடாவும் வழங்கப்பட்டு உள்ளது.
-
9 Sep 2023 10:20 PM GMT
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஹிமந்த பிஸ்வா சர்மா – அசாம் முதல் மந்திரி அலுவலகம் டுவிட்
இதுதொடர்பாக அசாம் முதல் மந்திரி அலுவலகம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “பாரத் மண்டபத்தில் ஜி20 பிரதிநிதிகளுக்கான இரவு விருந்தின் போது முதல்-மந்திரி டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார். அசாம் அரசுக்கும் சிங்கப்பூர் குடியரசிற்கும் இடையே நடந்து வரும் பல்வேறு கூட்டாண்மைகள் குறித்து முதல்-மந்திரி ஆரோக்யமான உரையாடலை மேற்கொண்டார்” என்று அதில் பதிவிட்டிருந்தது.
-
9 Sep 2023 9:33 PM GMT
ஐக்கிய அரபு அமீரக அதிபரை சந்தித்தது மிகவும் அருமையாக இருந்தது – பிரதமர் நரேந்திர மோடி
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “டெல்லியில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தது மிகவும் அருமையாக இருந்தது. அவரது நுண்ணறிவுப் பார்வைகள் மற்றும் உலகளாவிய நன்மையை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தை இந்தியா ஆழமாக மதிக்கிறது” என்று அதில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
-
9 Sep 2023 9:13 PM GMT
சாலையோர உணவை ருசி பார்த்த சர்வதேச தலைவர்களின் இல்லத்தரசிகள்
‘ஜி-20’ மாநாட்டுக்காக டெல்லிக்கு வருகை தந்துள்ள சர்வதேச தலைவர்களுடன் அவர்களின் மனைவிகளும் வந்துள்ளனர். அவர்களுக்கு டெல்லி ஜெய்ப்பூர் மாளிகையில் நேற்று சிறப்பு மதிய விருந்து அளிக்கப்பட்டது. அதில், சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன. மேலும் சில சாலையோர உணவுகளையும் பல்வேறு நாட்டு முதல் பெண்மணிகள் ருசி பார்த்தனர்.
பின்னர், தேசிய நவீன கலைக்கூடத்தில் விசேஷமாக இடம்பெற்ற கண்காட்சியை அவர்கள் கண்டு ரசித்தனர்.
துருக்கி, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மொரீசியஸ் நாட்டு தலைவர்கள் உள்ளிட்டோரின் மனைவியர் இந்த கண்காட்சியை வெகுவாக ரசித்தனர். அவர்கள் சிறுதானியங்கள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டறிந்ததாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
9 Sep 2023 8:39 PM GMT
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் உரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் உரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும் சிங்கப்பூரும் நமது மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை தொடர்ந்து ஆழப்படுத்தும்” என்று அதில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
-
9 Sep 2023 8:36 PM GMT
ஜி-20 பிரதிநிதிகளை கவர்ந்த இமாசலபிரதேச பெண்களின் கம்பளி ஆடைகள்
புதுடெல்லி,
ஜி-20 மாநாட்டையொட்டி டெல்லியில் இந்திய கைவினைப்பொருட்கள் கண்காட்சி, விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இமாசலபிரதேச மாநிலத்தின் நகாரைச் சேர்ந்த பெண்கள் சுயஉதவிக் குழுக்களின், கையால் நெய்யப்பட்ட, கையால் பின்னப்பட்ட கம்பளி ஆடைகள், பொருட்கள், மாநாட்டு பிரதிநிதிகளை வெகுவாக கவர்ந்தன. பலர் அவற்றை விரும்பி வாங்கிச் சென்றது தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்ததாக அந்த சுயஉதவிக் குழு பெண்கள் தெரிவித்தனர்.
-
9 Sep 2023 8:11 PM GMT
பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் சந்திப்பு
ஜி20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது,குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது டுவிட்டரில், “பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதுடெல்லியில் நடத்திய வெற்றிகரமான ஜி20 கூட்டத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிப்பது பற்றிய நல்ல இருதரப்பு விவாதம் நடந்தது” என்று அதில் பதிவிட்டுள்ளார்.