புதிய கட்டடத்தில் அடுத்த பொதுக்குழு கூட்டம்: தென்னிந்திய நடிகர் சங்கம் நம்பிக்கை

சென்னை தேனாம்பேட்டையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டம் இன்று (செப்.,10) நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை மற்றும் டாக்டர் விஜய் சங்கரின் ‛சங்கர் ஐ' கிளினிக் சார்பில் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. இதனை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் துவக்கி வைத்தனர்.

கூட்டத்தின் முடிவில் நாசர், விஷால், கார்த்தி, உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நடிகர் சங்கக் கட்டடம் மட்டுமே இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால் 5 மாதத்திற்குள் கட்டடம் கட்டப்பட்டிருக்கும். இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவில் இருப்பதால் கட்டடம் கட்டுவதில் இடைஞல்கள் ஏற்பட்டுள்ளது. நிதி இல்லாததால் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. கட்டடம் கட்டுவதற்கு ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. பெரிய நடிகர்களிடம் நிதியுதவி பெற முடிவெடுத்துள்ளோம். சங்கத்தின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்க கட்டடத்தில் நடைபெறும் என எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.