மணிப்பூர் கலவரம்: பழங்குடியினர் 3 பேர் சுட்டுக்கொலை

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ந் தேதி குகி பழங்குடியின மக்கள் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டு, பின்னர் அது பெரும் கலவரமாக மூண்டது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை, வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த மாநிலத்திலேயே அகதிகளை போல நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பழங்குடியினர் 3 பேர் சுட்டுக்கொலை

கலவரம் தொடங்கி 4 மாதங்கள் ஆகியும், இன்னுமும் கூட அங்கு பதற்றம் முழுமையாக நீங்கியபாடில்லை. மாறாக மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு மணிப்பூரின் தெங்னெவ்பால் மாவட்டத்தில் பல்லேல் நகரில் ஏற்பட்ட வன்முறையில் 3 சுட்டுக்கொல்லப்பட்டனர். பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் நேற்று அங்குள்ள கங்போப்கி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் தடைசெய்யப்பட்ட ஆயுத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு

இம்பால் மேற்கு மற்றும் கங்போக்கி மாவட்டங்களின் எல்லை பகுதியில் இருக்கும் இரெங் மற்றும் கரம் கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள காங்குய் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

வாகனங்களில் வந்து இறங்கிய ஆயுத கும்பலை சேர்ந்தவர்கள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குகி-சோ என்ற பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் இம்பால் மேற்கு மற்றும் கங்போக்பி மாவட்டங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. கங்போக்பியை தளமாக கொண்ட செயல்படும் சிவில் சமூக அமைப்பான பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழு இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.