3,000 அடி ஆழமான குகையில் சிக்கிய அமெரிக்கர் 10 நாளுக்கு பின் மீட்பு| American trapped in 3,000-foot cave rescued after 10 days

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அங்காரா: துருக்கியில், மிக ஆழமான குகைகளில் ஒன்றான மோர்கா குகையில், ஆராய்ச்சிக்குச் சென்று உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட, அமெரிக்காவைச் சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி, 10 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.

மேற்கு ஆசிய நாடான துருக்கியில், டாரஸ் மலைகளில் மோர்கா குகை உள்ளது. இந்த குகை, 3,000 அடி ஆழமுடையது.

இந்த குகையின் அமைப்பை வரைபடமாக்குவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி, 40, உள்ளிட்டோர், கடந்த ஆக., இறுதியில் குகைக்குள் சென்றனர்.

கடந்த 2ம் தேதி, மார்க் டிக்கிற்கு கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டது.

இதில் நோய்வாய்ப்பட்ட அவர், குகைக்குள் சிக்கினார். இதையடுத்து, அவரை மீட்கும் பணி ஒரு வாரத்துக்கும் மேல் நடந்து வந்தது.

மார்க் டிக்கியை மீட்கும் பணியில் பல்கேரியா, குரோஷியா, ஹங்கேரி, இத்தாலி, போலந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த, 190 நிபுணர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 10 நாட்களுக்கு பின், மோர்கா குகையில் இருந்து, மார்க் டிக்கி பத்திரமாக மீட்கப்பட்டார். மிகவும் பலவீனமாக இருந்ததால், ஸ்ட்ரெச்சர் உதவியுடன் அவரை மீட்புப் படையினர் துாக்கிச் சென்றனர்.இந்தத் தகவலை உறுதிப்படுத்திய துருக்கி அரசு, ‘மருத்துவமனையில் மார்க் டிக்கிற்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.