அடடே… மேடையில் பிரதமருக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த சச்சின் – என்ன தெரியுமா?

Sachin Gift To PM Modi: பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் கட்டப்பட இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இன்று அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மைதான கட்டடக்கலையின் கருப்பொருள்

மேலும், அந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாரணாசி மைதானத்தின் கட்டடக்கலை கருப்பொருளானது இந்துக் கடவுளான சிவப்பெருமானை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பிறை வடிவ கூரை அட்டைகள், திரிசூல வடிவ ஃப்ளட்லைட்கள், வாரணாசியின் மலைப்பாதைகளை ஒத்த இருக்கைகள் மற்றும் முகப்பில் பில்விபத்ரா வடிவ உலோகத் தாள்கள் உள்ளிட்டவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் 30 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி இருக்கும். கான்பூர் மற்றும் லக்னோவிற்கு பிறகு உத்தரபிரதேசத்தின் மூன்றாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் இதுவாகும். 

பிரதமருக்கு பரிசுகள்

மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,”வாரணாசியில் புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் மகிழ்ச்சி மற்றும் பாக்கியம் எனக்கு உள்ளது. கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக அவர் மாநிலத்திற்கு வருவது இதுவே முதல் முறை. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ஆர்வலர் சார்பாகவும் அவரை வரவேற்கிறேன்” என்றார்.

#WATCH | Sachin Tendulkar with PM Modi and CM Yogi Adityanath at the event to mark the foundation stone laying of an international cricket stadium in Varanasi, UP pic.twitter.com/TjgIHNrelD

— ANI (@ANI) September 23, 2023

இந்நிலையில், இம்மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவின் போது மேடையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு நினைவு பரிசை வழங்கினார். ‘NAMO’ என பெயரிடப்பட்ட இந்திய அணியின் தற்போதைய ஜெர்ஸியை சச்சின் பிரதமர் மோடிக்கு வழங்கினார். ஜெய் ஷா மற்றும் ரோஜர் பின்னி ஆகியோர் பிரதமர் மோடிக்கு பிரத்யேகமாக கையெழுத்திடப்பட்ட பேட்டையும் வழங்கினர்.

இந்தியாவில் உலகக் கோப்பை 

இந்தியாவில் மட்டுமின்றி தற்போது உலகத்திற்கே கிரிக்கெட் சீசன் எனலாம். 50 ஓவர் போட்டிகளுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்க உள்ளது. வரும் அக். 5ஆம் தேதி முதல் லீக் சுற்று போட்டிகள் தொடங்க உள்ளன. இறுதிப்போட்டி வரும் நவ. 19ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டி மற்றும் இறுதிப்போட்டி இரண்டும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வரும் அக். 8ஆம் தேதி சென்னையில் சந்திக்கிறது. 

முன்னதாக, செப். 30ஆம் தேதி இங்கிலாந்துடனும், அக். 3ஆம் தேதி நெதர்லாந்துடனும் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் மோத உள்ளது. அகமதாபாத், சென்னை உள்பட பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, தரம்சாலா, மும்பை, புனே, லக்னோ ஆகிய 10 நகரங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.