வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு, அந்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை திசை திருப்பவே தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறது என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் கருத்து
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78வது கூட்டத்தொடரின்போது, பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காக்கர் பேசும்போது, இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதி மற்றும் ஆக்கப்பூர்வ தொடர்புகளையே நாங்கள் விரும்புகிறோம்.
பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற, இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா பதிலடி
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா. பொது சபையின் இரண்டாவது குழுவுக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கெலாட் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்து வெளியேற வேண்டும். எல்லை கடந்த பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கான கட்டமைப்புகளை அந்நாடு உடனடியாக மூட வேண்டும். சட்டவிரோத மற்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ள இந்திய பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.
ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். இந்தியாவின் உள்விவகாரங்களை பற்றி அறிக்கைகளை வெளியிட பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. பாகிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை திசை திருப்பவே தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறது. இவ்வாறு அவர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement