அம்பேத்கரை பார்க்க வேண்டும் ; படப்பிடிப்பிற்கே மம்முட்டியை தேடிவந்த மகாராஷ்டிர மக்கள்

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் கண்ணூர் ஸ்குவாட். வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. கேரளாவில் குற்றம் செய்துவிட்டு தப்பித்து வட மாநிலத்தில் ஒளிந்துள்ள குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளபோலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா மட்டுமின்றி புனே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. குறிப்பாக புனேயில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்து மகாராஷ்டிரா மக்கள் சிலர் படப்பிடிப்பு தளத்திற்கு மம்முட்டியை பார்ப்பதற்காக வந்துள்ளனர்.

அங்கிருந்த படக்குழுவினர் அவர்களை தடுத்தபோது நாங்கள் அம்பேத்கரை பார்க்க வந்திருக்கிறோம்.. எங்களை அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த தகவல் மம்முட்டியின் காதுகளுக்கு சென்று அவர் இவர்களை சந்தித்தபோது அனைவரும் மம்முட்டியை கைகூப்பி வணங்கியுள்ளனர். இந்த நிகழ்வு குறித்து ஆச்சரியப்பட்ட படக்குழுவினருக்கு அதன் பின்னர் தான் மம்முட்டி இதற்கு முன்பு அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறாக வெளியான படத்தில் அம்பேத்காராக நடித்திருந்தார் என்பதே ஞாபகத்திற்கு வந்ததாம்.

அந்த அளவுக்கு மகாராஷ்டிரா மக்களின் மனதில் அம்பேத்கராகவே பதிந்து விட்டார் மம்முட்டி. அதனால் தான் அவரது படப்பிடிப்பு தங்கள் பகுதியில் நடைபெறுகிறது என்பதை கேள்விப்பட்டு உடனடியாக அவரை பார்ப்பதற்கு வந்தார்களாம். கண்ணூர் ஸ்குவாட் படக்குழுவினர் மம்முட்டிக்கு வட மாநிலங்களிலும் இவ்வளவு செல்வாக்கு இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு, தற்போது அதுகுறித்த தகவல்களை மீடியாக்களில் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.