பெங்களூரு :முதல் இலகுரக தேஜஸ் இரட்டை இருக்கை விமானத்தை, ஹெச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனம் முறைப்படி நம் விமானப் படையிடம் நேற்று ஒப்படைத்தது.
கர்நாடகாவின் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம், நம் விமானப் படையில் பயன்படுத்தக்கூடிய இரு இருக்கைகள் உடைய, 18 இலகுரக தேஜஸ் விமானங்களை வடிவமைத்து தர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், 2023 – 24ம் நிதியாண்டிலேயே எட்டு விமானங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, முதல் இலகுரக தேஜஸ் இரட்டை இருக்கை விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், நம் விமானப் படையிடம் நேற்று முறைப்படி வழங்கியது. பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் பங்கேற்று, இந்திய விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆர். சவுத்ரி முன்னிலை யில் அதன் சேவையை துவங்கி வைத்தார்.
இது குறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
குறைந்த எடையில், எந்த காலநிலையையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இலகுரக இரட்டை இருக்கை தேஜஸ் விமானம், விமானப் படையின் அனைத்து பயிற்சிகளிலும் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் போர் விமானமாகவும் இதை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement