உலகக்கோப்பைத் தொடர் இன்று அஹமதாபாத்தில் தொடங்கியிருக்கிறது. வருகிற அக்டோபர் 8 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்கள் காவி நிறத்தில் ஜெர்சி அணிந்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நியூசிலாந்தும் இங்கிலாந்தும் இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியை அஹமதாபாத்தில் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியை வருகிற ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கத்தில் வைத்தே ஆடவிருக்கின்றனர். இந்தப் போட்டியில் ஆடுவதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். நேற்றே பயிற்சியிலும் ஈடுபட தொடங்கினர். இந்நிலையில் இரண்டு அணி வீரர்களுக்கும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பயிற்சி செஷன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக பயிற்சி செஷன்களுக்கு நீல நிற ஜெர்சியில் வரும் இந்திய வீரர்கள் இன்றைக்கு புதிதாக காவி நிறத்தில் ஜெர்சி அணிந்து வந்திருந்தனர். இது விவாதத்தைக் கிளப்பியது.

ஏனெனில், இந்திய அணிக்கு முக்கியமான போட்டிகளுக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தது. அவற்றிற்கான பயிற்சியின் போது கூட இந்திய வீரர்கள் நீல ஜெர்சியில்தான் வந்திருந்தார்கள். திருவனந்தபுரத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த புகைப்படத்தை சஞ்சு சாம்சன் கூட பகிர்ந்திருந்தார். அதில், இந்திய வீரர்கள் வழக்கமான ஜெர்சியையே அணிந்திருந்ததை காண முடிந்தது. ஆனால், இங்கே முக்கியமான போட்டிக்காக சென்னை வந்திறங்கியவுடன் பயிற்சியில் காவி நிற ஜெர்சியை அணிந்தது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை எற்படுத்தியது.
2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வேறு நிற ஜெர்சியோடு களமிறங்க வேண்டிய சூழலில், நீலத்திற்கு மாற்றாக காவியையே தேர்வு செய்திருந்தனர். அப்போது அந்த ஜெர்சியுமே கடுமையான விமர்சனங்களை சந்தித்திருந்தது

இந்த மாற்றம் குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!