ரோகித் அதிரடி ஆட்டம்…பாகிஸ்தானை பந்தாடி ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்த இந்தியா…!

ஆமதாபாத்,

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணி தரப்பில் பாபர் ஆசம் 50 ரன், ரிஸ்வான் 49 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், பாண்ட்யா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், கில் களம் புகுந்தனர். இதில் கில் 16 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த கோலி 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 63 பந்தில் 86 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கே.எல்.ராகுல் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.