செயிட் அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரான செயிட் அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக இன்று (17) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு அக்கட்சியின் உயர்பீடம் தீர்மானித்தது. அந்தத் தீர்மானத்துக்கு எதிராக அவரால் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவை 2023 ஒக்டோபர் 06 எ திகதி உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானத்தினூடாக நிராகரிக்கப்பட்டுள்ளதால், அரசியல் அமைப்பின் 99(13)(அ) யாப்புக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வெற்றிடம் காணப்படுவதாக 2023 ஒக்டோபர் 06 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தானத்துக்கு அமைய அந்த வெற்றிடத்துக்கு செயிட் அலி ஸாஹிர் மௌலானா இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

1988 முதல் அரசியலில் ஈடுபட்ட செயிட் அலி ஸாஹிர் மௌலானா 1994 முதல் 2004 வரை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

அதனையடுத்து, அவர் 2015 – 2020 காலப்பகுதியில் எட்டாவது பாராளுமன்றத்தில் முதன்மைக் கைத்தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர், தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அரச கருமை மொழிகள் பிரதி அமைச்சர் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.