சேலம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி மொச்சை காடு பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், “சேலம் அம்மாபேட்டை, பச்சைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி காயத்ரி. தான் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சமூக நலத்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வருவதாக என்னிடம் அறிமுகமானார்.
அப்போது அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் தமிழக அரசு ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குவதாகக் கூறினார். இந்த கடனுதவியைப் பெற வேண்டுமானால், பயனாளிகள் தலா 20,000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், மொத்த கடன் உதவித்தொகையில் 50 சதவிகிதம் அரசு மானியம் வழங்குவதாகவும் கூறினார்.

இதை நம்பிய நான் உட்பட பல பெண்கள், 24 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தோம். ஆனால், அவர் உறுதியளித்தபடி கடன் பெற்றுத் தரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் காயத்ரி கூறியது போன்ற நலத்திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து காயத்ரியிடம் பணத்தைத் திரும்பிக் கேட்டபோது நெருக்கடி அதிகரித்ததால், வேறு வழியின்றி முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்தார். பல மாதங்கள் கடந்த நிலையிலும், மீதப் பணம் 14 லட்சம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் காயத்ரியிடம் பணத்தைக் கேட்டபோது அழகாபுரத்தில் வசிக்கும் அவருடைய தோழி சாவித்திரி என்பவருடன் சேர்ந்து கொண்டு, அடியாள்களை வைத்துக் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இது குறித்து சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் காயத்ரி, லெனின், இளமாறன், சாவித்திரி ஆகியோர்மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி, முதற்கட்டமாக லெனின், சாவித்திரி, இளமாறன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

தலைமறைவாக இருந்த காயத்ரியை தீவிரமாக போலீஸார் தேடி வந்த நிலையில், காயத்ரி சென்னையில் தலைமறைவாக இருப்பது போலீஸாருக்குத் தெரியவந்து, சம்பவ இடத்துக்குச் சென்று சேலம் நகர காவல் நிலைய, காவல் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் காயத்ரியைக் கைதுசெய்து அழைத்து வந்தனர்.
கைதுசெய்யப்பட்டிருக்கும் காயத்ரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.