மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம்: உள்ளூர் காவல் துறையை அணுக மா.கம்யூ.க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மத்திய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி உள்ளூர் காவல் துறையை அணுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதன்மீது 7 நாட்களில் காவல் துறை முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60-வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பிரச்சார பயணங்கள் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக காவல் துறை டிஜிபிக்கு அக்டோபர் 10-ம் தேதி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனுவுக்கு தமிழக காவல் துறை டிஜிபி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படாது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உள்ளூர் காவல் நிலையம் அல்லது காவல் ஆணையரிடம் தான் மனு அளிக்க வேண்டும். உள்ளூர் சூழலை பொறுத்து சம்பந்தப்பட்ட காவல் துறையினர் முடிவெடுப்பார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டால் உள்ளூர் சூழலை பொறுத்து முடிவு செய்யுமாறு காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர், உள்ளூர் காவல் துறையினரிடம் மனு அளிக்குமாறு உத்தரவிட்டார். அவ்வாறு அளிக்கப்படும் மனுவை, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் 7 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை, அனுமதி கேட்கும் நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருந்தால், மாற்று தேதியில் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.