வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காசா : 3 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன், எகிப்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன. ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு, முதல்முறையாக நிவாரண பொருட்கள் காசாவுக்கு சென்றுள்ளன.
காசாவில், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே 15வது நாளாக போர் நீடித்து வருகிறது. போர் துவங்கிய உடன், காசா செல்லும் ரபா நகரில் உள்ள எல்லைப் பாதையை எகிப்து மூடியது. இதனால் அந்த பகுதி வழியாக வெளியேற முடியாமல் தவித்தனர்.
அந்த பகுதியில் இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதால், வெளிநாட்டினரும் வெளியேற முடியவில்லை. அந்த வழியாக நிவாரண உதவிப் பொருட்களை வழங்கவும் கொண்டு செல்வதிலும் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், ரபா எல்லைப்பகுதியை எகிப்து இன்று திறந்துள்ளது. இதனையடுத்து 3 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் 200 லாரிகள் அந்த வழியாக சென்றுள்ளன. இது குறித்த புகைப்படங்களை எகிப்திய மீடியாக்கள் வெளியிட்டு உள்ளன.
அமெரிக்க பிணைக்கைதிகள் விடுதலை
இந்நிலையில், இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் உள்ளிட்ட 200 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பேரை விடுதலை செய்தனர். ஜூடித் தாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலியே ஷோசானா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

அப்பாவிகளை விடுதலை செய்வது தொடர்பாக கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் பேசி வருவதாகவும், வருங்காலங்களில் இன்னும் ஏராளமானோர் விடுதலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், அவர்களுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். விடுதலை செய்யப்பட்டவர்களை, இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்புடன் அழைத்து சென்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement