உத்தரபிரதேசம்: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம்

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் கமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்பவரின் மகன் குணால் (வயது 5). சிறுவன் விளையாடும் போது அவனது கட்டைவிரல் துண்டானது. உடனடியாக உறவினர்கள் சிறுவனை அழைத்துக்கொண்டு மீரட் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். சிறுவன் வலியால் துடித்திருக்கிறான்.ஆனால் அங்கு இருந்த பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் காலம் கடத்தியுள்ளனர்.

இதனால் குணால் உறவினர்களுக்கும், டாக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

ஒரு கட்டத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் அனைவரும் சேர்ந்து குணாலின் உறவினர்களை விரட்டி விரட்டி அடித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 3 ஜூனியர் டாக்டர்கள் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.சி.குப்தா தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.