இரண்டல்ல.. மூன்று படம் வந்தாலும் ஜப்பான் தாக்கு பிடிக்கும் : தயாரிப்பாளர் நம்பிக்கை

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ளது 'ஜப்பான்'. குக்கூ, ஜோக்கர் என வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இந்த படத்தையும் அதேபோன்று ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் அதே சமயம் கார்த்திக்கு ஏற்ற கமர்சியல் ஆக்ஷன் பார்முலாவில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வெளியாக இருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 28ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இது கார்த்தியின் 25வது படம் என்பதால் இசை வெளியீட்டு விழாவோடு அவருக்கான பாராட்டு விழாவாகவும் நடைபெற போகிறது. இதில் கார்த்தியின் முதல் படம் தொடங்கி இப்போது வரை பணியாற்றிய நடிகர்கள், இயக்குனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிடம், தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுளக்ஸ் திரைப்படமும் வெளியாகிறது. இதனால் ஜப்பான் படத்துக்கு போதிய அளவு திரையரங்குகள் கிடைக்குமா, வசூல் பாதிக்காதா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, “தீபாவளி ரிலீஸில் மூன்றாவதாக ஒரு படம் வெளியானாலும் கூட எங்களது படத்திற்கு என இருக்கும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற திரையரங்குகளும் காட்சிகளும் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கேஜிஎப், பீஸ்ட் படங்கள் ஒன்றாக வெளியான சமயத்தில் தினசரி ஆறு காட்சிகள் ஓடும் அளவிற்கு இங்கே ஒரு சிஸ்டம் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. எங்களது படத்திற்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கின்றன என்பதை விட எத்தனை பேர் இந்த படத்தை பார்க்க விரும்புகிறார்கள் என்பதில் தான் படத்தின் வெற்றியே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.