ஒரு நொடி தாமதமானாலும் விடுப்பில் கழிக்கப்படும்: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு ‘டீன்’ சுற்றறிக்கை

மதுரை: பயோமெட்ரிக் வருகைப் பதிவில் ஒரு நொடி தாமதமானாலும் கூட மருத்துவர்களுக்கு வருடாந்திர விடுப்பில் கழிக்கப்படும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம், அனைத்து மருத்துவர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை என்று சிகிச்சை வரும் நோயாளிகள் குற்றம்சாட்டி வந்தனர். அதனால், தேசிய மருத்துவக்கவுன்சில் வழிகாட்டுதல்படி மருத்துவர்கள் தடையின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்படி அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை பயன்படுத்தி தங்களது வருகையை கட்டாயமாக காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த நடைமுறை முறையாக கண்காணிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் கடந்த ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை மருத்துவர்கள் வருகைப் பதிவை கணக்கீடு செய்து பார்த்ததில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெரும்பாலான மருத்துவர்கள் காலை நேரங்களில் பணிக்கு சரியான நேரங்களில் வருவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதனால், மருத்துவர்கள் பணிநேரத்தில் காலையில் ஒரு நிமிடத்துக்கு தாமதமாக வந்தால் கூட அதை கண்டறியப்பட்டு அது ‘ஆப்சென்ட்’ ஆக கணக்கிடப்படும் என்றும், ஈட்டிய விடுப்பில் இருந்து அந்த நாட்கள் நடைமுறையில் உள்ள விதிகளின்படி கழித்துக் கொள்ளப்படும் என்று அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம், மருத்துவப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

மேலும், அந்த சுற்றறிக்கையில் மருத்துவர்கள் அலுவலக வேலையாக வெளியே சென்றாலும் அல்லது வேறு அலுவலக பணியாக சென்றாலும் அது குறித்து சம்பந்தப்பட்ட துறை தலைவர்களிடம் தெரிவித்து பதிவு செய்ய வேண்டும் என்றும், அப்படி பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அது விடுமுறையாகவே அல்லது வராமல் போனதாகவே கருதப்பட்டு அவர்களது ஈட்டிய விடுப்பில் கழித்துக் கொள்ளப்படும் என அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்புடன் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து டீன் ரத்தினவேலுவிடம் கேட்டபோது, “தேசிய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்படி ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடு பின்பற்றப்படுகிறது. அந்த அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் 20 இடங்களில் இந்த பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமைக்கப்பட்டு மருத்துவர்கள் வருகை கண்காணிக்கப்படுகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.