அவரோட சாதனைகளை வருங்கால வீரர்கள் முறியடிப்பது கடினம் – ஸ்ரீசாந்த் கருத்து

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறது. இதுவரை 5 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விராட் கோலி அற்புதமாக ஆடி வருகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (49 சதம்) சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் இரண்டு சதங்களே தேவை. இந்நிலையில் சச்சினின் சாதனையை விராட் கோலி உடைத்தாலும் அவரின் சாதனையை வருங்கால வீரர்கள் உடைப்பது கடினம் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது,

நாம் அனைவரும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைப் பற்றி பேசுகிறோம். ஆனால் விராட் கோலி அதிக சதங்கள், அரை சதங்கள், உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை முறியடிக்கப் போகிறார்.அதையும் வருங்காலத்தில் சிலர் உடைக்கலாம்.

ஆனால் வருங்காலத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலியின் சாதனைகளை உடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் ரன்களுக்காக மட்டும் அல்ல அவர் பீல்டிங் செய்யும்போது, அதை ஆர்வத்துடன் செய்கிறார்.இந்தியாவைப் பொறுத்தவரை, கிரிக்கெட் ஒரு மதம் மற்றும் உலகம் முழுவதும், அது ஒரு உணர்வு. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.