நான் விளையாடியதில் சிறந்த கேப்டன் இவர் தான்.. தோனி இல்லை – யுவராஜ் சிங்!

இந்தியாவுக்காக விளையாடிய மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். இந்திய லெஜண்ட் யுவராஜ் சிங் 2000 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமானார் மற்றும் 2017ல் கடைசியாக தேசிய அணியில் விளையாடினார். யுவராஜ் மொத்தம் 304 ஒருநாள், 40 டெஸ்ட் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் விளையாடி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஒரு பேட்டியில் யுவராஜ் சிங் பேசுகையில், தான் விளையாடியதில் சிறந்த கேப்டன்களை தேர்வு செய்தார்.  ஆனால் அதில், எம்எஸ் தோனியை தேர்வு செய்யாமல் சவுரவ் கங்குலியை தேர்வு செய்தார் யுவராஜ்.

“சௌரவ் கங்குலி எனக்கு மிகவும் பிடித்தமான கேப்டனாக இருப்பார். அனைத்து இந்திய கேப்டன்களிலும், அவர் என்னை மிகவும் ஆதரித்தார். கங்குலி இளம் திறமைகளை வளர்த்தார். அணியை வலுவாக உருவாக்க இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். அவர் அனைவரையும் ஆதரித்தார்” என்று யுவராஜ் கூறினார்.  2002 சாம்பியன்ஸ் டிராபியை இலங்கையுடன் பகிர்ந்து கொண்ட சவுரவ் கங்குலி தலைமையிலான அணியில் யுவராஜ் இருந்தார். 2003ல், கங்குலியின் கீழ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் யுவராஜ் ஒரு வீரராக இருந்தார்.  2007ல், டி20 உலகக் கோப்பையில் தோனியின் துணை கேப்டனாக யுவராஜ் இருந்தார், இந்த தொடரையும் இந்தியா வென்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பையை இந்தியா வென்றது.  யுவராஜ் பேட்டிங் மட்டும் இன்றி பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்கு ஆற்றினார்.  யுவராஜ் சிங் நீண்ட காலம் தோனி மற்றும் கங்குலியின் கீழ் விளையாடினார்.

யுவராஜ் சிங் துணை கேப்டனாக பல ஆண்டுகள் இருந்த போதிலும், ​​​​எந்த வடிவத்திலும் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. யுவராஜ் சிங் தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் 1900 ரன்கள் மற்றும் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  ஒருநாள் போட்டிகளில் 8701 ரன்கள் மற்றும் 111 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை கொண்ட யுவராஜ் 1177 ரன்கள் மற்றும் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். யுவராஜ் சிங் ஐபிஎல்லில் 2,750 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருக்கும் தோனியை தேர்வு செய்யாமல், கங்குலியை தேர்வு செய்ததில் யுவராஜ்க்கு ஒரு காரணம் உள்ளது.  ஏனெனில், தோனிக்கு முன்பே இந்திய அணியில் இடம் பிடித்து, ஒரு உலக கோப்பை தொடரிலும் விளையாடி உள்ளார்.  யுவராஜ்க்கு பின்பு இந்திய அணியில் இடம் பிடித்தாலும், தோனி முக்கிய வீரராக கருதப்பட்டார்.  இளம் வயதிலேயே இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு தோனிக்கு கிடைத்தது.  ஆனால் யுவராஜ்க்கு கிடைக்கவில்லை.  பல இடங்களில் தோனி மீது வன்மத்தை கொட்டியுள்ளார் யுவராஜ் சிங்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.