Sri Lanka National Cricket Team: நடப்பு ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதி வாரத்தில் உள்ளது. இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறிவிட்டன. இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த இரு இடங்களுக்கு கடுமையாக போட்டியிடும்.
மேலும், நடப்பு தொடரின் அரையிறுதிக்கு மட்டுமின்றி 2025ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்க வேண்டும். இங்கிலாந்து அணி 10ஆவது இடத்தில் இருப்பதால் மீதம் உள்ள போட்டிகளில் வெல்ல அந்த அணி கடுமையாக முயலும். எனவே, இந்த வாரம் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் என கூறலாம்.
அந்த வகையில், தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி தவறவிட்டது. எனவே, அதற்கு பொறுப்பேற்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (Sri Lanka Cricket) செயலாளர் மோகன் டி செல்வா நேற்று (நவ. 5) அவரது பொறுப்பை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்க (Roshan Ranatunga) இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மொத்தமாக கலைத்துள்ளார். தொடர்ந்து, 7 பேர் கொண்ட இடைக்கால வாரியக் குழுவையும் அவர் அமைத்துள்ளார்.
1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்த அப்போதைய கேப்டன் அர்ஜூன ரணதுங்க (Arjuna Ranatunga) இந்த இடைக்கால வாரியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவில் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் செல்வம் செழிக்கும் விளையாட்டு அமைப்பான இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்க முன்வைத்தார். தானாக வாரிய உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சர் ரோஷன் பொதுவெளியில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடப்பு உலகக் கோப்பையில் கடந்த வியாழக்கிழமை (நவ. 2) அன்று இந்திய அணியுடன் 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியடைந்ததை அடுத்து, பொதுமக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. மக்களின் கடும் எதிர்ப்பினால், கொழும்புவில் உள்ள கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்திற்கு போலீசார் கடும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இலங்கை அணிக்கு இனி இரண்டு போட்டிகள் மீதம் உள்ளது. வங்கதேசம் அணியுடன் இன்று மோதும் இலங்கை அணி, நவ. 9ஆம் தேதி நியூசிலாந்துடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.